Total Pageviews

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Friday, 23 September 2011

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா?.!



பாரதியார் ஒரு வேறுபாடான பாவலர்.

தானிலிருந்து பிறப்பதுதான் இலக்கியம் என்போர் பலர். தானைவிட்டு விலகும்போதே சிறப்பான இலக்கியம் வரும் என்போரும் பலர்.

இவ்விரண்டு முனைகளிலிருந்து நாம் ஒரு தமிழ்ப்பாவலனைப் பார்க்கும் போது, இந்த வகையில் சிலரும், அந்த வகையில் பலரையும் பார்க்கலாம்.

எடுத்துகாட்டாக, பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் தான்மை கலக்காப் பொதுவுடமைக் கருத்துக்களைச் சொல்லும். பாரதிதாசன் தான்மை கலந்து தார்மீகக்கோபம் கொண்டாலும் அஃதெல்லை மீறாது.

பாரதியாரின் கதை வேறு.

இயற்கையைக்கூட அவரால் குழந்தையைப் போல இரசிக்க முடியாது. அதிலும் ஒருவகையான அரசியலைக் கலந்துதான் பார்ப்பார்.

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்.

இதில் சொல்ல வந்த கருத்து, “மனிதா, உங்களுக்குள்ளேயே வேறுபாடு பார்த்து ஒருவரை ஒருவர் வெறுக்கிறாய். நான் உங்களை விட மேல்படியில் ஏறி உலகத்தைப் பார்க்கிறேன். எனக்கு இயற்கையும் என் ஜாதி அதாவது மனிதர்கள் அனைவரும், மற்றும் காணும்பொருள்களெல்லாம் என் ஜாதி. நான் பேதம் பார்ப்பதில்லை என்கிறேன்.”

கருத்து உயர்வே என்பதில் இரு கருத்துகளுக்குமிடமில்லை. ஆனால் அதை நான் இங்கு பேசவில்லை. பேசுவது அவரின் இயலாமையேதன்னை விலக்காமல் அவருக்கு வாழ்க்கையில்லை.

இப்படியாக அவர் பாக்களெல்லாம் தான்மை விரவியிருந்தபடியே அவரின் சிறப்பான கருத்துக்கள் தமிழ் உலகுக்குச் சொல்லப்பட்டன. இதில் அவருக்கு ஒரு பிரச்சினையென்ன வென்னவென்றால், அவரால் இயல்பாக வாழ முடியவில்லை.; காண்பதெல்லாம் குறைவுகளில் தோயாமல் இல்லை என்பதே அவர் கட்சி. எனவே தன் சுற்றம், தன் இனம், தன் ஜாதியார், என்று ஒரு குற்றங்குறை பார்க்கும் பாவலர் ஆகி விட்டார்அவர் ஒரு மிஸ்ஃபிட் எனலாம்.

இப்படிப்பட்ட ஆளுமையிலே தன்னை உணர்ந்ததால், அவர் தன்னைப் பிறரிடமிருந்து மாறானவன் என்பதை உள்வாங்கி, தான் ஆயிரம்பேரில் ஒருவனாக காணாமல் போக மாட்டேன் எனவும் தன் சாதனைகள் எனக்கு எட்ட முடியும் எனவும் சொல்வதாக இப்பாடல் பாடுகிறார்

தேடிச்சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக வுளன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ

மற்றும் என்னை அருளுடன் படைத்து விட்டால் நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ என்றும் கேட்டுக்கொள்கிறார்.

இஃதெல்லாம் அவருக்குப் பொருந்தும். மற்றவருக்கும் பொருந்துமா ? எல்லாரும் தேடிச்சோறு நிதம் என்றுதான் இருக்கமுடியும். சின்னஞ்சிறு கதைகள் பேசாமல் தாம்பத்திய வாழ்க்கையோ குடும்ப வாழ்க்கையோ நட்பு வட்டாரமோ இல்லை. வாடித் துன்பமடைகிறோம். கிழப்பருவமெய்தி போகிறோம். இதிலன்ன தவறு? எல்லாரையும் இறைவன் எதையாவது சாதிக்கவேண்டுமென்பது கட்டாயமென்றானா ? ஏன் ஒரு நல்ல கணவனாகவோ,மனைவியாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ இருக்கக் கூடாது ?

இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், ஒரு பெண்ணிடம் என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்க வேண்டியவர்கள் கேட்கும்போது, வீட்டுப்பெண், (ஹவுஸ் வைஃப்) என்று லஜ்ஜையுடந்தான் பதில் சொல்கிறாள்!. இதுபோல பலரும்.

ஏன் எல்லாரும் சாதனை சாதனை என்று பொருந்தா முடியா இலட்சியங்களோடு அலைய வேண்டும்? ஏன் ஒரு பள்ளியாசிரியையாக இருப்பது லஜ்ஜையான விசயம் ? ஒரு அரசு அதிகாரியாக இருப்பது உயர்வான விசயம்?

இத்தகைய எண்ணங்கள் எனக்கு வருகின்றன பல பதிவர்கள் மேலே சுட்டிக்காட்டிய பாரதியாரின் பாடலை தம் இலட்சியமாகப் போட்டுக் கொண்டு எழுதுவதைப் படிக்கும்போது.

இவர்கள் என்ன எல்லாரும் பாரதியார்களா? இல்லை அவர் போல கட்டாயம் ஆகத்தான் வேண்டுமா ? இல்லை அவருக்குச் சரி, நமக்கு சரியா என்பதெல்லாம் சிந்தித்தார்களா ?

இன்னொரு பதிவில் அப்பதிவாளரின் இலட்சியம் இதுவாம

" வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக"

இதை எப்படி இவர் செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. செய்து விட்டால் அட்லீஸ்டு இவரை நாம் தமிழக முதல்வராக்கி தமிழ்நாட்டில் சாதி சாதிச்சண்டைகளை ஒழிக்கலாம்.

இன்னொரு பதிவரோ, தன்னை பாரதியாரின் பயங்கரவாதி என்கிறார். அதாவது பாரதியாரில் இலட்சியங்கள் அனைத்தையும் தீவிரமாகப் பின்பற்றுகிறாராம். பதிவில் காதல் கவிதைகள் மட்டுமே போட்டு வருகிறார்.

இவர்களை என்ன சொல்வது ? ஒன்று சொல்லலாம். பள்ளியில் படிக்கும்போது வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என கனவு, பெரியவரானதும் அக்கனவுகள் வெறுங்கனவுகளே என பறந்தோடிப் போய் விடுகின்றன‌. வாழ்க்கையின் எதார்த்தங்கள், கசப்பான உண்மைகளைப் உய்த்துணர்ந்து மாறிக்கொள்கிறோம்.

மாறவில்லையென்றால் ?

இப்படிதான், பாரதியாரின் 'தேடிச்சோறு' பாவைப் பாராயணம் செய்தி நித்தம் நித்தம் பூஜையறையில் ஓதிக்கொள்ளலாம்.

Monday, 12 September 2011

நாஞ்சில் நாடு !


தமிழக வரலாற்றில் மூவேந்தர்கள் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் குறுனில மன்னர்கள் ஆண்டார்கள். அதன்பின் ஜமீந்தார்களும் பாளையக்காரர்களும் வெள்ளையருக்குக் கீழிருந்து ஆண்டார்கள். 

இப்படிப்பட்ட காலங்களில் தமிழ்மொழியே அனைத்து மக்களும் பேசினாலும், அனைவரும் தனித்தனி நாட்டவர்கள்; தனித்தனி ஜமீனைச் சேர்ந்தவர்கள். ஜமீன்களின் சட்ட ஒழுங்கு முறையில் கீழ் வந்தவர்கள்.  மேலும் ஒரு நாட்டுடன் மற்ற நாடு போர்; ;பகை என்றும் ஒரு ஜமீனும் இன்னொரு ஜமீனும் பகையென்றும் வரலாறு.  மூவேந்தர்கள் ஒருவரையொருவர் அழித்து வாழ்ந்து மார்தட்டிக்கொண்டார்கள்.

இன்று எதுவுமே இல்லை. ஒரே ஒரு மானிலம்தான் அது தமிழ்நாடு.  ஆனால், இன்னொரு மானிலமும் தமிழ்நாட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது. அதன் பெயர் நாஞ்சில் நாடு.  இது நாகர்கோயிலிருந்து களியக்காவரை வரும்போலத் தெரிகிறது.  இங்குள்ள மக்கள் எப்படி நினைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து வரும் படித்தவர்கள் தங்களை நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விழைகிறார்கள்., நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் ஜெபா, நாஞ்சில் மனோ, என்று ஒரே நாஞ்சில் மயம்தான்.

சமீபத்தியநாஞ்சில் நாடனின் பதிவில் முன்னாளில் எவரோ ஒருவர் அக்காலத்தில் தங்கள் நாடு எப்படி இருந்தது என்று கழிவிரக்கத்துடன் எழுதியதைப் படித்தவுடன் இவர்கள் ஏன் தங்களைத் தமிழர்கள் என்று நினைக்கவில்லை என்ற கேள்வி எழகிறது. 8 கோடியில் நானும் ஒரு தமிழன் என்று ஒரு பதிவெழுதிய ஒருவரின் பெயர் நாஞ்சில் ஜெபா !

சிவகங்கைச் சீமை, கொங்கு நாடு, தொண்டை நாடு, பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம் ஜமீன் என்று எல்லாமே போய் விட்டன. இன்று அனைவரும் தமிழ் பேசி தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் என்று மாறிவிட இந்த நாஞ்சில் நாட்டு மர்மம் மட்டும் நீண்டுகொண்டே போகிறதே ஏன்?

Thursday, 1 September 2011

பிள்ளையார் சதுர்த்தி பயம்













சின்ன வயதினிலே ஆவலாய் எதிர்பார்க்கப்பட்ட பண்டிகைகளில் ஒன்று.  பெரியவர்களாலும் வரவேற்கப்படும் பண்டிகை. காரணம் இப்பண்டிகையின் எளிமையே. பட்டாசு சத்தம் கிடையாதல்லவா? ஒளி, ஒலி கொண்டாட்டங்களால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழ்னிலை மாசுபடுதல் என்றெல்லாம் கிடையாது. சிறுவர்கள் விரும்பும் காரணம் கொழுக்கட்டை போன்ற வினோதமான தின்பண்டங்கள். பலவிதமான கொழுக்கட்டைகள்.  ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்குமேல். அவைகள் மற்ற வீட்டுக்குக் கொழுக்கட்டைகளோடு பரிமாறிக் கொள்ளப்படும். பனையோலைக் கொழுக்கட்டை பட்டணங்களில் கிட்டாது. கிராமங்களில் மட்டுமே.
இன்னொரு காரணம் வணங்கப்படும் தெய்வம். அதன் உருவம் சிறுவர்களுக்குப் பிடிக்கும்.  "ஆனை வடிவில் ஒரு தெய்வமா ?" என்று மெல்ல நகைக்கலாம். அத்தெய்வத்தைப் பற்றிய கதைகளும்தான்.  “அம்மா குளிக்கப் போகிறேன். ஆரும் வராமல் பார்த்துக்கொள்ளடா செல்லம்” என்று அம்மா சொன்னவுடன் எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்வோம். இத்தெய்வத்தின் கதையில் அது வரும். எனவே சிறுவர்கள் ஒரு மனயிணைப்பைப் (relating to) பெறுகிறார்கள் இத்தெய்வத்திடம். மேலும் தாயின் மீதுள்ள அளவற்ற அன்பினால், தாயைப்போலவே தனக்கு வரும் மனைவி குணத்தில் இருக்கவேண்டுமென்று சொல்லும் கதை. தாயிற்சிறந்த கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.  என்றெல்லாம் வரும் பழமொழிகளை இத்தெய்வத்தின் கதை நிரூபிக்கிறது.  ஆனைமுகம் கோபத்தைக் காட்டவியலாது. எனவே எப்போது ஒரு சாந்த முகம்.
எனவே இப்படிப்பட்ட மனச்சாய்வுகளை (predilections) உருவாக்குவதால் இத்தெய்வத்துக்கும் சிறுவர்களுக்கும் பிணைப்பு. இதை மேலும் இணைப்பதற்காக “இவர் ஞானக்கடவுள் எனவே இவரை வணங்கினால தேர்வில் வெற்றிபெறலாம்” என்றும் நினைத்து தேர்வு நாட்களில் பிள்ளையார் கோயில்களில் மாணவர் கூட்டம் திரளும்.

பிள்ளையார் என்றால் இப்படிப்பட்ட நினைவுகள்தான் சின்னவயதிலே வரும். பிள்ளையரைத் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை வைத்து பத்து நாட்கள் ஆராதனை செய்து கடலில் கரைக்கும் வழக்கம் அப்போது இல்லை.
இன்றைய நிலையென்ன? பலபலவடிவ பிள்ளையார்களுக்குப் பலபலவிடங்களில் பத்து நாட்கள் ஆராதனை. இது மராட்டிய பார்ப்பனர்கள் கண்டுபிடித்தது. திலக்கே இதை முதலில் செய்தார். பிள்ளையார் மராட்டியர்களின் இஷ்ட தெய்வம். துர்கை வங்காளிகளுக்கு. அவர்களும் இப்படிப் பத்துநாள் வைபவம் ‘துர்கா பூஜா’ என்ற பேரில் எடுப்பார்கள், இறுதிநாளில் கடலில் சிலைகளைக் கரைப்பார்கள். மேளதாளம், தாரை தப்பட்டைகளோடு சிலைகள் கடலை நோக்கியோ அல்லது ஹூக்ளி நதியை நோக்கியோ பயணிக்கும்
தமிழ்நாட்டிலும் துர்க்கை வழிபாடு தொன்று தொட்டு வருவது. பாலையும் பாலைசேர்ந்த நிலத்தில் கொற்கையை வழிபட்டார்கள் தமிழர்கள் என்கிறார் தொல்காப்பியர். கொற்கையே துர்கை.

தமிழர்கள் வங்காளப் பழக்கத்தை ஏன் நகலெடுக்கவில்லை? பிள்ளையார் வழிபாட்டில் மட்டும் ஏன் மராட்டிய வழக்கம் ? காரணம், பிற மதங்களுக்குச்சவால் விடும் முகமாக திலக் பிள்ளையாரை வைத்து மத அரசியல் செய்தார். இன்றும் செய்யப்படுகிறது. அஃதை இங்கும் செய்தால் மத அரசியல்வாதிகளுக்கு இலாபம் கிடைக்கும் என்பதாலே.  பிள்ளையார் ஊர்வலம் வெறும் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பவே. தனிமனிதனின் உணர்ச்சிகளையல்ல. தனிமனிதர்கள் கூட்டமாகச்ச் சேரும்போது ஆங்கு நிகழ்பது கூட்டச்சிந்தனை. கூட்டுணர்வு. மாப் சைக்காலஜி. mob pshchology. அதை இப்படியும் அப்படியும் அக்கூட்டத்தை வழிநடத்துவோர் தமக்கேறப மாற்றிவிடலாம் இலகுவாக. இப்படிப்பட்ட ஊர்வலங்கள் படாடோபமாக அட்டகாசமாக மாற்றல் கூட்டுணர்வை மேலும்மேலும் உயர்த்தவே.  இங்கு எப்படி ஆன்மிகம் வரும்?
இதன் விளைவு: மதக்கலவரங்கள் வெடிக்கும் அபாயங்கள். அவைகளத் தடுக்க, வெடித்தால் அடக்க அரசு காவலர்களைக் பத்துநாட்கள் குமிக்கிறது,  குறிப்பாக, கடைசி நாளில் பிள்ளையார்ச் சிலைகள் ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழக்கத்தோடு எடுத்துச் செல்லும்போது, எங்கு எப்போது கலவரம் வெடிக்குமோ? பழிக்குப்பழியாக‌ நம்வீடும் கொளுத்தப்படுமோ என்ற பயம்.  கலவரம் வெடித்தால், வீடுகள் கொழுத்தப்படும். எதிர்வினைகள் நேரும். உயிர்ப்பலிகள் விழும். இவற்றை  வைத்துக்கொண்டு, மக்களிடையே பிரிவினைகளை உருவாக்கி தேர்தலில் வெற்றியடையலாம்.
எனவே ஒவ்வொரு பிள்ளையார் சதுர்த்தி என்பது இன்று ஒரு பயங்கர நாளாகி விடுமோ எனற அச்சத்தில் கழிகிறது.

                                                                             ****

Saturday, 27 August 2011

இலக்கியவாதிகள்


 

பாவலர்கள் (கவிஞர்கள்), நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், சிறுகதையாசிரியர்கள் போன்று எழுத்து மூலத்தைக் கொண்டவர்கள் இலக்கியவாதிகள்சிலர் கட்டுரைகளும் வரைவார்கள்.

இவர்கள் தங்கள் இளம் வயதில் எழுதத் தொடங்குகிறார்கள்பின்னர் அவர்களுள் சிலர் விட்டுவிடுவார்கள் வேலை, குடும்பம் என்றாகி விடும்போதுசிலர் தொடர்கிறார்கள்

சிலர் உண்மையிலேயே இலக்கியத்தரம் வாய்ந்த படைப்புக்களினால் பேர் பெறுகிறார்கள்சிலர் அரசியலில் நுழைந்து பேர் பெற்று அப்பேரைத் தம் படைப்புக்களைப் பரவலாக்கப் பயன்படுத்துகிறார்கள்சிலர் எதிரும் புதிருமான கருத்துக்கள வெளியிட்டு ஒரு நெக்ட்டிவ் பப்ளிசிட்டியைபெற்று தம்மை அறிமுகப்படுத்துக்கொண்டு நிலைக்கிறார்கள்சிலர் பாடல்களின் பெருந்தத்துவங்களை அழகு தமிழில் சொல்லித் தன் ஆளுமையையும் அப்பாடல்களில் சொன்னது போல இருக்கும் என்பதாக மக்களை மயக்குகிறார்கள். இவர்களில் திரைப்பட பாடலாசிரியர்கள் உண்டுஇவர்கள் திரைப்படக் கதாநாயகர்களைப் போல புகழ் பெறுகிறார்கள்

இன்று இவர்களில் சிலர் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். தாங்களாகவே வலைபதிவுகளைக் கணணி வல்லுனர்களின் மூலம் அட்டகாசமாக வடிவமைத்து  எழுதி வருகிறார்கள்ஏற்கனவே இவர்களில் இரசிகர்கள் இங்கே குழுமுகிறர்கள்ஒரு 'கல்ட்' உருவாக்கப்படுகிறதுஇரசிகர்கள் இவர்களின் ஒவ்வொரு பதிவையும் விழுந்துவிழுந்து படிக்கிறார்கள்ஆதரிக்கிறார்கள். பதிவை எதிர்ப்போரை அடியாட்கள் போல நின்று தாக்குகிறார்கள்.

இதெல்லாம் பரவாயில்லை. இவ்வெழுத்தாளர்கள் தங்கள் பாப்புலாரிட்டியப் பயன்படுத்தி நச்சுக்கருத்துக்களை ஒரு சார்பு நிலையைப் போற்றியும் இன்னொரு சார்புனிலையை இகழ்ந்தும் எழுதுகிறார்கள். இரசிகர்களின் சிந்தனையை ஓர்வழிப்படுத்துகிறார்கள். (radcalisation)

இவர்களே இன்றைய இலக்கியவாதிகள்எனினும் அங்கங்கே சில நல்ல புதினங்கள் வருகின்றன. அவை மேலே சொன்ன அரசியல்வாதி போன்ற எழுத்தாளர்களிடமிருந்தும் உண்டு.

இலக்கியவாதி ஒரு சாதாரண மனிதன்தான்அழுக்குகளும் ஆபாசங்களும் நிறைந்தவன்தான். இவனுக்கு ஏன் கோயில் கட்ட வேண்டும்? படிப்பவர்கள் அவற்றைமட்டும் படித்துவிட்டு படைப்பாளிகளுக்குக் கோயில் கட்டுவது நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் கோயில் கட்டுவதைப்போன்றதே.

இந்த உணர்ச்சிவசப்படல் தமிழரின் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. தமிழரின் இந்த அடிப்படைக்குணத்தை எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள்  பயன்படுத்தி வாழ்ந்து கொழுக்கிறார்கள்.

எல்லாரையும் தன்னைச்சுரண்டி கொழுக்கவைக்க ஏன் தமிழர் தன்னைப் பலி கொடுக்கிறார் ?