தமிழக வரலாற்றில் மூவேந்தர்கள் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் குறுனில மன்னர்கள் ஆண்டார்கள். அதன்பின் ஜமீந்தார்களும் பாளையக்காரர்களும் வெள்ளையருக்குக் கீழிருந்து ஆண்டார்கள்.
இப்படிப்பட்ட காலங்களில் தமிழ்மொழியே அனைத்து மக்களும் பேசினாலும், அனைவரும் தனித்தனி நாட்டவர்கள்; தனித்தனி ஜமீனைச் சேர்ந்தவர்கள். ஜமீன்களின் சட்ட ஒழுங்கு முறையில் கீழ் வந்தவர்கள். மேலும் ஒரு நாட்டுடன் மற்ற நாடு போர்; ;பகை என்றும் ஒரு ஜமீனும் இன்னொரு ஜமீனும் பகையென்றும் வரலாறு. மூவேந்தர்கள் ஒருவரையொருவர் அழித்து வாழ்ந்து மார்தட்டிக்கொண்டார்கள்.
இன்று எதுவுமே இல்லை. ஒரே ஒரு மானிலம்தான் அது தமிழ்நாடு. ஆனால், இன்னொரு மானிலமும் தமிழ்நாட்டுக்குள் இருப்பதாகத் தெரிகிறது. அதன் பெயர் நாஞ்சில் நாடு. இது நாகர்கோயிலிருந்து களியக்காவரை வரும்போலத் தெரிகிறது. இங்குள்ள மக்கள் எப்படி நினைக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் இங்கிருந்து வரும் படித்தவர்கள் தங்களை நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவே விழைகிறார்கள்., நாஞ்சில் நாடன், நாஞ்சில் சம்பத், நாஞ்சில் ஜெபா, நாஞ்சில் மனோ, என்று ஒரே நாஞ்சில் மயம்தான்.
சமீபத்திய நாஞ்சில் நாடனின் பதிவில் முன்னாளில் எவரோ ஒருவர் அக்காலத்தில் தங்கள் நாடு எப்படி இருந்தது என்று கழிவிரக்கத்துடன் எழுதியதைப் படித்தவுடன் இவர்கள் ஏன் தங்களைத் தமிழர்கள் என்று நினைக்கவில்லை என்ற கேள்வி எழகிறது. 8 கோடியில் நானும் ஒரு தமிழன் என்று ஒரு பதிவெழுதிய ஒருவரின் பெயர் நாஞ்சில் ஜெபா !
சிவகங்கைச் சீமை, கொங்கு நாடு, தொண்டை நாடு, பாஞ்சாலங்குறிச்சி, எட்டயபுரம் ஜமீன் என்று எல்லாமே போய் விட்டன. இன்று அனைவரும் தமிழ் பேசி தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் என்று மாறிவிட இந்த நாஞ்சில் நாட்டு மர்மம் மட்டும் நீண்டுகொண்டே போகிறதே ஏன்?